திலகவதி புதினங்களில் காதல்

  • கு. ஜெயலட்சுமி பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
  • சு. விஜயா கலைவாணி நெறியாளர், ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி

Abstract

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி" என்ற வரிகள் மூலம் தமிழின் பெருமைகளை அறியலாம். அத்தகு மொழியில் இலக்கியங்கள் தோன்றிய காலத்திலிருந்தே கதை இலக்கியங்களும் தோன்றி விட்டது. மக்களின் வாழ்க்கை முறையில் சமூக பொருளாதார அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டு காலத் தமிழ் இலக்கியங்களில் ஆண்களின் மேலாதிக்கப் போக்கு நிலைபெற்று வருவதை அறிய முடிகிறது. சமூக வளர்ச்சி என்பது ஆண் பெண் இருவரையும் சார்ந்தே அமைகிறது. ஆண் பெண் உறவுநிலை தொடர்ந்து நிலைபெறுவதற்கு அன்பு, பாசம், காதல், பரந்த மனப்பான்மை, விட்டுக்கொடுக்கும் பண்பு ஆகியவை முக்கிய காரணங்களாக அமைகின்றன. ஒரு ஆண் பெண்மீது வைக்கும் அன்போ பெண் ஆண்மீது வைக்கும் அன்போ சமுதாயத்தில் காதல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஆண் பெண் இருவரும் விரும்பி காதல் கொண்டு அக்காதலில் உண்மைத் தன்மையின்றி தன் சுயநலத்திற்காக ஆண்கள் விலகிச் செல்லும்போது பெண்களுக்கு அத்தகைய காதலே பெரும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. திருமணத்திற்குப் பின்னும் காதல் பலபேரின் வாழ்வில் சிக்கலையே ஏற்படுத்துகிறது. ஆண்கள் தம் உடல்தேவையை நிறைவேற்ற பெண்களிடம் காதல் போல் நடிக்கின்றனர். காதல் என்ற பெயரில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செ#கின்றனர். காதல் வாழ்வில் பெண்களின் இந்த நிலை மாறினாலன்றி சமுதாயத்தில் மாற்றம் ஏற்படாது. மேலும் அன்பை பிரதானமாகக் கொண்டு கணவனின் உயர்வுக்கு மனைவியும் மனைவியின் உயர்வுக்கு கணவனும் துணையாக அமைகின்ற குடும்பமே சிறந்த குடும்பமாகும்.

Published
2025-03-21